
தமிழ் தேசியக் கூட்டமைப்பு -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : சந்திப்பு
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை கருத்துக்கூறினார்.
இலங்கை கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் எதிர்நோக்கியுள்ள வைரஸ் பிரச்சினைகள் மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் கூறினார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல், கொரோனா பிரச்சினைகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு அவசரப்படாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இனப் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிற போதிலும், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப் பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கம் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பிளவுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் ஒன்றிணைந்து தமிழர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை தருவார்கள் என நம்ப முடியாதுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துடன் நல்லெண்ணத்தை உருவாக்கி, இனப் பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை காண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்பதன் அடிப்படையிலேயே அதன் முன்னேற்றத்தை அணுக முடியும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன், பல தசாப்தங்களாக சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பௌத்தர்களின் விசேட தினமான வெசாக் பௌர்ணமி தினத்தில் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கைகளை முன்வைக்கின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களைத் திரட்டி தன்னிடம் தருமாறும், அவர்களை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதாகவும் பிரதமர் உறுதியளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.
9 வருடங்களின் பின்னரான இந்த சந்திப்பு திருப்தியளித்ததா என அவரிடம் வினவினோம். அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை அவதானித்தே அது தொடர்பில் கருத்துரைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை நடத்திய தமது அணுகு முறையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு அப்பால் தற்போது நாட்டிலுள்ள கொரோனா பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையில், அதற்கான அனுமதியை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பானது தமிழர்களின் வாழ்வுக்கு புதியதொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புவதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். கொரோனா பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் தற்போது நாடு இருந்தாலும், இனப் பிரச்சினைக்கான தீர்வை விட்டு விட முடியாது என மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
முந்தைய பேச்சுவார்த்தை
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு காணும் நோக்குடன் தமிழர் தரப்புக்கும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்கை வகித்து, இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.
எனினும், அப்போதைய ஆளும் தரப்பினர் 2011ஆம் ஆண்டு இறுதி காலப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பிற்கு வருகை தராத நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நிறுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.